Ad Widget

சென்னை வெள்ள அனர்த்தம்: சம்பந்தன், சீவிகே கவலை தெரிவிப்பு

இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான சென்னையில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“இந்தப் பாரிய இயற்கையின் சீற்றத்தால் தங்களது சொந்தங்களை மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு கூட இந்த அனர்த்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழும் மக்களினதும், தமது வாழ்வாதாரங்களையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் மக்களினதும் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தை தளர்ச்சி அடையாமல் வழங்கி கொண்டிருக்கும் தமிழக அரசுக்கும் ஏனைய அரச மற்றும் தனியார் ஸ்தாபனங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தக் காலநிலை விரைவில் வழமைக்கு வந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப நாம் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்” – என்றுள்ளது.

இதே வேளை வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்

வெள்ளத்தினால் பல லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்கை பாதிகப்பட்டிருகின்றது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், பலர் காணாமல் போயும், பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தும், தமது அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமலும் உணவுக்காகவும் பலர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசும் இந்திய அரசும் அவசர உதவிகளைச் செய்து வருகின்றது. எனினும் அவர்கள் வாழ்க்கை வழமை நிலைக்கு திரும்ப சர்வதேச சமூகம் உதவிகளை செய்யவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

வட, கிழக்கு தமிழ் மக்கள் ஆகிய நாமும் அவர்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் பங்குகொள்வதோடு, அவர்களின் நிலைமை வழமைக்குத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இவர்களது இயல்பு வாழ்கை திரும்பலுக்கு ஏராளமான நிதித் தேவை உள்ள நிலையில் எமது வடக்கு மாகாண சபையும் எமது மக்கள் சார்பான உதவிகளை மேற்கொள்ள முன் முயற்சி எடுக்கிறது என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்.

இலங்கைத் தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவாக இருந்து எமது மக்களுக்காக தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுத்தவர்கள் தமிழக மக்கள் எமது மக்களுக்காக போராட்டங்களை நடத்தியவர்கள் உயிர்த்தியாகம் செய்தவர்களின் உறவுகள் இன்று இயற்கை அனர்த்தினால் நிர்க்கதியாகியுள்ளார்கள்.

அவர்களின் இயல்பு நிலை கூடிய விரைவில் திரும்பும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அவர்களின் துன்பங்களிலும் துயரத்திலும் எமது வட மாகாண சபையும் தமிழ் தேசிய இனமும் பங்குகொள்கின்றது எனத் தெரிவித்துக் கொள்கின்றோம். – என்றுள்ளது.

Related Posts