Ad Widget

சுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை

இம்மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலிலே பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக இவரைப் பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றார்.

இவர் ஜெர்மன் மொழியிலே (DEUTCH) ஆற்றல் மிக்கவர். இவர் போன்று மொழிப் புலமையுள்ளவர்கள் எங்கள் மத்தியிலே குறைவாகவே காணப்படுகின்றனர். இவரது மொழியாற்றல் காரணமாக ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் எங்களுடைய மக்களுக்குத் தேவையான உதவிகள் பலவற்றை செய்துகொண்டிருக்கின்றார்.

இலங்கையிலே வாழுகின்ற எங்களுடைய மக்களுக்காக மிகவும் கரிசனையுடன் சேவைசெய்து வருபவர். தேர்தலிலே இவருடைய வெற்றி இங்கு வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டிலே ஒரு மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.

எனவே, அங்கு வாக்குரிமை உள்ள அனைத்து மக்களும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு ஆதரவளித்து இவரைத் தெரிவு செய்வதன் மூலம் அங்கு வாழுகின்ற மக்களுக்கு மாத்திரமல்ல இங்கே வாழக்கூடிய மக்களுக்கும் பெருமை சேர்ப்பதோடு, தேவையானபோது சுவிஸ் நாட்டு அரசை எங்களுடைய பிரச்சினைகளில் அக்கறைகொள்ள வைக்கவும் அது உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts