கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம்: வியாழேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறிச் சென்று தனித்துவமாக செயற்பட முனைவார்களானால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கண்ணகியம்மன் ஆலய வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”வடகிழக்கு தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதுடன், ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே உள்ளது.

வட.கிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர். கூட்டமைப்பு பிளவுபடுவதை மக்கள் யாரும் விரும்பவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து வெளியேறி எந்தக் கட்சியாவது தனித்துச் செயற்படுமானால் அது தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமான செயற்பாடாகவே அமையும்.

இன்று தேசிய அரசியல் கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு தங்களது அமைப்பாளர்களைப் பிரதேசங்களில் நியமித்து தமது அரசியலை வட.கிழக்கில் பலப்படுத்தி வரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து நிற்குமானால் தமிழர்களின் பலம் உடையும் நிலையேற்படும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முக்கியத்துவமான தேர்தலாகக் காணப்படுவதுடன் அது ஒரு பலப்பரீட்சையாகவும் காணப்படும்” என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Related Posts