வடக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் போராட முன்வர வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கீரிமலை, சேந்தான்குளம் மற்றும் திருவடிநிலை ஆகிய பகுதிகளில் 127 ஏக்கர் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் இன்று திங்கட்கிழமை (07) காலை காணி அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாகாண சபை, பிரதேச சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புகளுக்கு எதிராக தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
அப்போராட்டம் மூலமே வடக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பை நாம் தடுத்து நிறுத்த முடியும். நாம் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தாவிட்டால் வடக்கிலே பெருமளவான இராணுவ முகாம்களும் சிங்களக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுவிடும்.
எனவே நாம் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
காணி சுவீகரிக்கும் நோக்கில் இடம்பெற்ற நிலஅளவை பணிகள் இடைநிறுத்தம்!