Ad Widget

ஊடகங்களில் வெளியான அறிக்கையை மறுக்கிறார் செல்வம் அடைக்கலநாதன்!

‘எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை – ஒருபோதும் இணையோம்’ என்ற தலைப்புடன் இன்று பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்-

‘எதிரிகள்- துரோகிகளுடன் தமிழ் மக்கள் பேரவை – ஒருபோதும் இணையோம்’ என்ற தலைப்புடன் அச்செய்தியில் நானும் எமது கட்சியின் உப-தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமும் (ஜனா) கூறியதாக வெளிவந்த செய்தி எம்மால் குறிப்பிடப்படவில்லை. அது உண்மைக்கு புறம்பானது. இச்செய்தியானது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினதோ அல்லது பெயர் குறிப்பிடபட்டுள்ள எமது கருத்தோ அல்ல என்பதையும் மிகவும் தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

கடந்த 27.12.2015ல் கூடிய எமது கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தில் தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமாக கட்சியின் நிலைப்பாட்டை (கட்சியின் செயலாளர் நாயகத்தினால்) ஊடக அறிக்கை மூலமாக தெளிவுபடுத்தி இருந்தோம். தமிழ் மக்களின் ஒற்றுமை என்ற பலத்தின் ஊடாகவே எமது அரசியல் உரிமைகளையும், இனப்பிரச்சனைக்கான தீர்வையும் வென்றெடுக்க முடியும் என்ற நிலைப்பட்டில் நாம் உறுதியாக உள்ளோம். இந்த நிலையில் எப்படி இந்த வார்த்தையை நாம் பிரயோகித்திருக்க முடியும். இக்கருத்தினை நாம் ஒரு போதும் கொண்டிருக்கவுமில்லை.

இதேவேளை தமிழ் மக்கள் பேரவைக்கு கருணா, டக்ளஸ் போன்றவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது நல்லது என வடக்கு முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஜயா விடுத்த கோரிக்கை எமக்கு கவலை தருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts