இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணிகளையும், வீடுகளையும் விடுவிக்கக்கோரி உரிமையாளர்கள் பொலிஸ்நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 வீடுகளையும், 8 விவசாயக்காணிகளையும் உள்ளடக்கி இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளையும் வீடுகளையும் விடுவிக்கக்கோரியே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளவாலைப் பங்கு தந்தை ஜெயரஞ்சன் அடிகளார் தலைமையில் பொலிஸ் நிலையத்தின் முன்பாகக் கூடிய மக்கள், தமது வீடுகளை விடுவிக்கக்கோரி சுலோக அட்டைகளைத் தாங்கி நின்றனர்.
இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுமுறையில் சென்றுவிட்டார் என்று கூறி காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது வீடுகளை விடுவிக்கத் தாம் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வர் என அவர் மக்களிடம் உறுதியளித்ததுடன் மனுவையும் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக தழிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்துகொண்டனர்.