யாழ்.நகரப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தொன்றில் திருமண வீட்டிற்கு சென்ற தாய் ஸ்தலத்தில் பலியானதுடன் அவரது மகள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பரிதாப சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
திருமண வீடு ஒன்றிற்கு செல்வதற்காக தாயை மகள் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளை ஒழுங்கையிலிருந்து பிரதான வீதிக்கு செலுத்திய போது, வேகமாக வந்த இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
தாய் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மகள் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சத்திராஜா சவுந்திராணி என்ற தாயே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதோடு, சங்கீதா என்ற 23 வயதுடைய மகளே படுகாயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.