கிளிநொச்சி – பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஒரு வாரமாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவர்கள், தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று, இரண்டாவது நாளாக இந்தப் போராட்டம் தொடர்கின்றது. பரவிப்பாய்ஞ்சான் கிராமத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், அவைகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
இந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் கோரியிருந்த போதிலும், காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படாத காரணத்தினாலேயே தாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒரு தொடர் போராட்டமாக ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர், கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு பகுதிகளில் இராணுவத்தினரின் வசமிருந்த 142 ஏக்கர் காணிகளை படையினர் விடுவித்துள்ளனர்.
ஆயினும், இவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை. காணிகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பிபிசி செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.