இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடக வடக்கில் 10,184 வீடுகள் பூர்த்தி

உள்நாட்டில் இடம் பெயர்ந்தோருக்கான இந்திய வீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 43,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளன இந்த திட்டத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் 10,184 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டன என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதில் யாழ் மாவட்டத்தில் 1832 வீடுகளும் கிளிநொச்சியில் 3090 உம் முல்லைத்தீவில் 2540 உம் மன்னாரில் 1074 உம் வவுனியாவில் 648 வீடுகளும் கட்டப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 வீடுகள் பூர்த்தியாகவும் 100 வீடுகளை திருத்தவென தலா 250,000 ரூபா வழங்கப்பட்டது.இவற்றுக்கான மொத்த செலவு 7.8 பில்லியன் இலங்கை ரூபாவாகும்.

2014 இல் 16000 வீடுகள் கட்டப்படுமெனவும் 2015 இல் 17,000 வீடுகளும் கட்டப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வீட்டுத்திட்டத்தின் 3 ஆவது கட்டத்தில் மத்திய மற்றும் ஊவா மாகாணத்தின் தோட்டத் தொழிலாளருக்கு 4000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் இத்திட்டம் 2014 ஏப்ரலில் தொடங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வீட்டுத்திட்டத்தின் 4வது கட்டத்தில் இடம்பெயர்ந்தோரில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளோருக்காக 2000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்.

பரீட்சாத்தமாக 1000 வீடுகளை வட மாகாணத்தில் அமைக்கும் வேலை யூலை 2012 இல் பூர்த்தியாகியது.

அனைத்து வீடமைப்புத் திட்டங்களுக்காக இந்திய அரசாங்கம் இன்னொரு நாட்டில் செய்யப்படும் மிகக்கூடிய உதவித்திட்டம் இதுவாகும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.