சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டதாக கூறப்படும், ஆறு இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அறுவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இவர்கள் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த 21ம் திகதி காத்தான்குடி கடற்பகுதியில் இருந்து குறித்த சந்தேகநபர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுள்ளனர்.
எனினும் அவர்கள் சென்ற படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்துள்ளது.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அதிகாரிகளால் காப்பாற்றப்பட்ட இவர்கள் மீளவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இன்று சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.