அரசுடன் நேரில் பேசுவதற்கு குழு அமைத்தது கூட்டமைப்பு!

அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசுடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் குழுவொன்றை நியமித்துள்ளது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா இருவர் வீதம் 8 பேர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பிலுள்ள
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரை நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) , ஹென்றி மகேந்திரன், என். ஸ்ரீகாந்தா, சிவநேசன் (பவன்), ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் முறைமை மாற்றம், காற்றில் பறக்கும் புதிய அரசின் வாக்குறுதிகள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவுக்குப் பொறுப்புக்கூறுவதில் அரசு காட்டும் மந்தகதி செயற்பாடுகள், வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் – அமைச்சர்கள் – உறுப்பினர்களுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகள், ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம், வவுனியா மாவட்டத்தில் வடக்குக்கான விசேட பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதில் காணப்படும் சர்ச்சைகள் தொடர்பில் பேசப்பட்டன.

இறுதியாக 2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உறுதியளிக்கப்பட்ட நிலையில் அதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசியல் சாசன ரீதியாக தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால் அது தொடர்பாக அரசுடன் உத்தியோகபூர்வமான பேச்சுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பங்காளிக் கட்சிகளினால் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசுடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா இருவர் வீதம் 8 பேர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரெலோ சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோவின் மூத்த உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.ராகவன் ஆகியோரே இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

எதிர்வரும் நாட்களில் குறித்த குழு கூடி அரசுடன் நேரில் பேசுவதற்கான தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது என அறியமுடிந்தது.

Related Posts