அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவால் உயிரிழந்தவர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அனுதாபம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது, தமிழக முதல்வராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட, எதிர்க்கட்சி உறுப்பினர் ஏ.ஜயதிலக்க, ‘எங்கள் நாட்டில் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அஞ்சலி செலுத்தவில்லை. முதல்வருக்கு வாழ்த்துச் சொல்கின்றீர்களே?’ என்று கேள்வியெழுப்பினார்.
இதன்போது குறுக்கிட்ட அவைத்தலைவர், ‘இது தொடர்பில் பிரேரணையொன்றை கொண்டு வந்திருந்தேன். முதலமைச்சருக்கு முதலாவதாக வாய்ப்பளிக்க இடமளிக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பிரேரணையை நான் கூறவில்லை. தற்போது கூறுகின்றேன்’ என்றார்.
தொடர்ந்து, ‘இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். அத்துடன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் உடனடியாக உதவிகளை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்’ என சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.