Ad Widget

அத்துமீறிய கடற்றொழில்கள் நிறுத்தப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறியும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தியும் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் தடைசெய்ய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இப் பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் வகையில் பிற பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இப்பகுதி மக்களால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி படைத் தரப்பினரும் கொக்கிளாய் கடற்பகுதியில் கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் என இப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.

இப்பகுதி கடற்றொழிலாளர்கள் ஏற்கனவே இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லைத் தாண்டியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழிலால் பெரிதும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், மேலும், மேலும் அவர்களை பாதிக்கக்கூடிய இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

தொழில் வாய்ப்புகளற்று, மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்துவரும் இப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக்கொள்வதில் தடைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, இதனை அவதானத்தில் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts