நாட்டில் ஏற்பட்டுள்ள, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள, பாதுகாப்பற்ற நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகள் பலவற்றில் மாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரை ஆணைக்குழு இடமாற்றியுள்ளது. வேறு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு குறித்த உயர் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்ற நேற்று கூடிய தேசிய பொலிஸ் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி புதிய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இதுவரை வடமேல் மற்றும் வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய அபேசிறி குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த நந்தன முனசிங்க வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு பொறுப்பாக இடமாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க பொலிஸ் அபிவிருத்தி பகுதிக்கு மாற்றப்பட்டு, கொழும்புக்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மேல் மாகாணத்தின் வடக்குக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் புத்தளத்துக்கு மாற்றப்ப்ட்டு அந்த இடத்துக்கு புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இதுவரை இருந்த சம்பிக்க சிறிவர்தனவை நியமிக்க நேற்று பொலிஸ் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.
நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த சந்தன அத்துகோரள திருகோணமலைக்கு மாற்றப்பட்டு திருமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.கட்டுபிட்டிய நீர்கொழும்புக்கு பொறுப்பாக அழைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பொலிஸ் அத்தியட்சர் சஞ்ஜீவ பண்டார சீத்தாவக்க பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டு கொழும்பு வடக்குக்கு பொறுப்பாக ஏ.எம்.யூ. சந்தன நியமிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சர் ஜே.ஏ.யூ.பி. ஜயசிங்க எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டு எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சர் தல்துவ கொழும்பு மத்திய பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளார்.
அத்துடன் பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், களனி பொலிச் பிரிவுக்கு பொருப்பாக நியமிக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான பொலிஸ்அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.