நாட்டில் பாவனையில் உள்ள சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளதோடு, இந்த பணிகள் இம்மாதம் 28ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன.
பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்துக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்க அரசு சார்பு தனியார்துறை நிறுவனங்கள் அல்லது தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தப்படும் சகல இயந்திரவாள்களும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.