பிரதான எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கவுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் கூடவுள்ள நாடாளுமன்றம் அமர்விலேயே இவ்விடயம் தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை புதிய எதிர்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஆளும், எதிர்கட்சிகளுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இன்று இறுதி தீர்மானத்தை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாத காலத்திற்கான வரவு-செலவு திட்ட இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இடைக்கால கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.