ஊர்காவற்றுறைப் பிரதேச சபையின் புதிய ஆட்சிக்காலம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களை பெற்ற சபைகளின் செயற்பாடுகள் இன்று 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற உள்ளு10ராட்சி மன்ற ஆணையத்தின் அறிவிப்புக்கு இணங்க இன்றையதினம் குறித்த சபையின் புதிய தவிசாளராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மருதயினார் ஜெயகாந்தன் மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளு10ராட்சி மன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க தேவையான 50 வீதமோ அன்றி அதற்கு மேலாகவோ ஆசனங்களை பெற்றுக்கொள்ளாத நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஊர்காவற்றுறை பிரதேச சபையில் அச்சபையிலுள்ள 13 ஆசனங்களில் ஆட்சியமைக்கத் தேவையான ஆசனங்களை பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தெரிவின் பிரகாரம் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சி அதிகாரத்தை கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளரும் கடந்த ஆட்சிக்காலத்தில் தவிசாளராக இருந்தவருமான மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் கூடவுள்ளது.
இதனிடையே ஊர்காவற்றுறை பிரதேச சபையை தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வென்றெடுத்ததுடன் குறித்த பகுதி மக்களுக்கும் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட, மேற்கொண்டுவரும் சேவைகளுக்கு தொடர்ச்சியாக மக்கள் அங்கிகாரம் அளித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.