வட. பகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இக்கவனயீர்ப்பு போராட்டம், ஆதீன முதல்வர்கள் மற்றும் துறவிகள் முன்னிலை வகிக்க, சைவ ஆலயங்களின் பரிபாலன சபைகள் மற்றும் தர்மகத்தா சபைகள், இந்து மக்கள் ஓண்றிணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இப்போராட்டம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து கோவில் வீதி ஊடாக கைலாய பிள்ளையார் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனை இடம்பெற்றது. பின்னர், அங்கிருந்து முதலமைச்சர் இல்லத்தைச் சென்றடைந்ததும் குறித்த சம்பவம் தொடர்பான கலந்துரையாடலை அடுத்து மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
மேலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வட. மாகாண ஆளுநர் ஊடாகவும் இந்து கலாசார அமைச்சருக்கு இந்து கலாச்சார திணைக்கள பிரதிநிதி ஊடாகவும் மகஜர்கள் கையளிக்கப்படன.