வட.மாகாணக் கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடியினை ஏற்ற மறுத்ததால் அவர் அமைச்சராகப் பதவி வகிப்பதற்குப் பொருத்தமற்றவர் என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வட.மாகாணக் கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடியினை ஏற்ற மறுத்துள்ளார்.
இலங்கை நாட்டின் பிரஜை என்ற வகையில் அவர் தேசியக் கொடியினை அவமதித்துள்ளார். நாம் நாட்டின் ஒரே மக்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்பதுடன், தேசியக் கொடிக்கான மதிப்பினை அனைவரும் வழங்க வேண்டும்.
தேசியக் கொடியினை ஏற்ற மறுத்து அதனை அவமதித்த அமைச்சர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர்” என அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.