Ad Widget

நிமலராஜன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழில் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 17ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று (19) அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4 மணியளவில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணி யாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்றஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.

அந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதன் போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர்.

குறித்த படுகொலை சம்பவம் நடைபெற்று 17 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விசாரணைகள் எதுவும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் கூட கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பில் எவ்விதமான விசாரணைகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts