உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ஆம், 6ஆம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது.

இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து மேற்படி 13ஆவது உலக தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.
இதன்படி 5ஆம் திகதி 1ஆவது மாநாடு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறும். இம் மாநாட்டில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரத்னம் விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ் அமர்வில் பன்னாட்டு மலர் வெளியீட்டு சிறப்புரையினை சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆற்றவுள்ளார்.
2 ஆவதுமாநாடு யாழ்.நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெறவுள்ளது.
இதில் முதன்மை விருந்தினராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சிதலைவருமான இரா.சம்மந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் கௌரவ விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் எ.நடராஜன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் அரியரத்தினம் கவிந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் இந்தியாவில் இருந்து 28 பேராளர்களும், மலேசியாவில் இருந்து 18 பேராளர்களும், இலங்கையை சேர்ந்த 24 பேராளர்களும் அடங்குவர். இதேபோல் ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.