நாங்கள் மக்கள் முன்னால் பிளவுபட்டு நிற்க முடியாது. அதற்காகவே சமரச முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. சமரச முயற்சிக்குப் பங்கம் ஏற்படாமல் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள் நியமனம் மேற்கொண்டமை தொடர்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்னை வந்து சந்தித்தபோது, திருமதி அனந்தி சசிதரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப் போவதாகக் கூறினார். அவர் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டிருப்பதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்.
மறுநாள் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, அனந்திக்கு மகளிர் விவகாரத்தை வழங்கப் போவதாகத் தெரிவித்தார். கட்சிப் பொதுச் செயலர் மற்றும் ஏனையோருடன் பேசிப் பதிலளிப்பதாகக் கூறினேன்.
அதன் பின்னர் நாம் கூட்டம் நடத்தி, எமது கட்சி சார்பில் இ.ஆர்னோல்ட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு பரிந்துரைத்தோம். அவர் இப்போது அமைச்சர்களை நியமித்துள்ளார். எதிர்கால விடயங்கள் தொடர்பில் பொறுத்திருந்து பார்ப்போம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்குக் கூறியதை மீண்டும் கூறுகின்றேன். நாங்கள் அமைச்சுப் பதவிகளுக்குப் போட்டியிட்டுக் கொண்டு, எமது மக்களின் விடுதலையை, அரசியல் தீர்வை தவறவிட முடியாது. எங்கள் மக்கள் முன்னால் நாங்கள் பிளவுபட்டு நிற்க முடியாது. இதற்காகவே சமரச முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சமரச முயற்சிக்குப் பங்கம் ஏற்படாமல் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றேன் – என்றார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய இரண்டாவது கடிதத்தில், முதலமைச்சர் தமிழ் அரசுக் கட்சியுடன் ஆலோசிக்காமல் செயற்படுகின்றார் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். கட்சித் தலைவர் மாவை.சேனாதிராசாவும் அதே விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். தற்போது அவற்றை நிரூபிக்கும் வகையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றார்.