கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம் மாதத்தின் 15 நாட்களில் 44 பேர் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் 120 பேர் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. கரவெட்டி மத்தி, துன்னாலை மற்றும் கரணவாய் பகுதிகளில் டெங்கு நோய்த்தாக்கத்துக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இப் பகுதிகளில் சுற்றுச்சூழல், டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெளிமாவட்டங்களுக்குச் சென்று விட்டு வருவோர் அதிகளவு டெங்குதாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக பனிமனையின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் மூலம் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழலை அழிப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது” என, அவர் மேலும் கூறினார்.