வவுனியா மாவட்டத்தில் களஞ்சியப்படுத்தப்பட்ட நெல்லினை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தெரிவித்து வவுனியா பாவக்களம் நெற் களஞ்சியசாலையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் பாரவூர்திகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) பாவற்குளம் படிவம் 6 பகுதி களஞ்சியசாலையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பாவற்குளம் படிவம் 6 நெற்களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் நெல்லினை தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கு பாரவூர்திகள் வந்திருந்தின.
இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய வவுனியா மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி ஆலைகளில் வேலை செய்வோர், பொது மக்கள் எனப்பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது, களஞ்சியசாலையில் உள்ள நெல்லினை மாவட்ட அரிசி ஆலைகளுக்கு வழங்க வேண்டும் அல்லது அதனை அரிசியாக மாற்றி மாவட்டத்தில் உள்ள சதோச மற்றும் பலநோக்க்குக் கூட்டுறவுச் சங்கம் மூலம் எமது பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.