புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி மரணித்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமியின் முதலாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தாங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த தமிழினி, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் புனர்வாழ்வுக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழினி, அவருடைய தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்படைக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவர் ஜெயக்குமார் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்திருந்தார். இந்நிலையில், புற்றுநோயால் தனது 43 ஆவது வயதில் அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பின்னர், அவர் எழுதியதாகக் கூறப்படும், “ஒரு கூர்வாளின் நிழல்” என்ற போராட்ட குறிப்புக்கள் மற்றும் “போர்க்காலம்” என்ற கவிதைத் தொகுப்பு ஆகியன வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
