வடக்கில் உள்ள மக்கள் யுத்தத்தின் வலிகளை சுமந்தவர்களாக உள்ளனர் என்று சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நச்சுத்தன்மையற்ற மருந்துக்கள் குறித்த அரச பொறிமுறையை அறிவூட்டும் மாவட்ட வேலைத்திட்ட கூட்டம், நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கின் சுகாதார துறைக்கு தேவையான உதவிகளுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிப்பிட்ட அவர், ஸ்ரீலங்காவின் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு அடுத்தபடியாக சுகாதாரம் மற்றும் கல்வித் துறைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள அரசு இனவாதம், மதவாதம், மொழி வாதம் அற்ற நல்லாட்சி அரசாக திகழ்வதாகவும் புதிய அரசியல் அமைப்பினூடாக தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலை கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தை விட வடக்குக்கே அதிக அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வடக்கு சுகாதார அமைச்சர் சுதேச மருத்துவ முறையை சிறந்த முறையில் கொண்டு நடத்துவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
