குழந்தை பிறந்து 31ஆம் நாள் நிகழ்வில் அதிக மதுபானம் அருந்திய தந்தை உயிரிழந்த சம்பவம் சங்கானை, ஆஸ்பத்திரி வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான அரியேந்திரன் அஜந்தன் (வயது 36) என்பவரே அதிகம் மதுவருந்தி உயிரிழந்துள்ளார்.
உறவினர்களுடன் சேர்ந்து அதிக மதுபானம் அருந்திய நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்குவதற்கு சென்றுள்ளார். வழமையாக நித்திரையின் போது சத்தமாக குறட்டை விடும் இவர், குறட்டை விடாமல் இருந்ததையடுத்து உறவினர்கள் அவரை தொட்டுப் பார்த்த போது உடல் அசைவற்று இருந்துள்ளது.
அதனையடுத்து, உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனைகளின் பின்னர், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.