கச்சதீவில் புதிய தேவாலயக் கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது என வெளியான செய்தியில் உண்மையில்லையென சிறீலங்காக் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினால் கச்சதீவு தேவாலயக் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சண்டே ரைம்ஸ் நாளிதழுக்கு செய்தி வெளியிட்டிருந்தார்.
ஆனால், இது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்த, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் அக்ரம் அலவி, தற்போது சிறீலங்காவில் நிலவிவரும் காலநிலை மாறுபாட்டின் காரணமாகவே இப்பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ் ஆயர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே, தாம் கச்சதீவில் புதிய அந்தோனியார் தேவாலயம் கட்டும் பணியை ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், தற்போது கச்சதீவில் கடுமையான மழை பெய்துவருவதன் காரணமாக அப்பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு அதிவாரம் காயும்வரை காத்திருக்கவேண்டியதேவையுமுள்ளது.
இந்தக் காரணிகளினாலேயே நிர்மாணப்பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாகவும் மீண்டும் விரைவில் இப்பணி ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தேவாலயம் முழுமையாக கட்டி முடிக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.