செயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை

முழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதியப்பட்ட சின்ன சில்லு மூலம் அவரால் மீண்டும் தன் கைவிரல்களை அசைக்க முடிந்திருப்பது மருத்துவ உலகின் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த இயன் புர்கர்ட் செயலிழந்த தன் விரல்களால் தற்போது கிடாரை வாசிப்பதன் மூலம் கணினி விளையாட்டை விளையாடுகிறார்.

hand-com

மூளை பாதிப்பு, பக்கவாதம், தண்டுவட பாதிப்பால் கைகால்கள் செயலிழந்துவிட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் உதவும் என்று இதன் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த வாகன விபத்தில் இயன் புர்கர்டுக்கு முழங்கைக்கு கீழே செயலிழந்து போனது. அவர் தன் விரல்களைப் பயன்படுத்த தற்போது அவர் பயின்று கொண்டிருக்கிறார். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் மோடார் கோர்டெக்ஸ் என்கிற பகுதியில் மிகச்சிறிய கணினிச் சில்லை மருத்துவர்கள் இவருக்குப் பொருத்தினார்கள்.

இயன் தன் கையையும் விரல்களையும் அசைக்க நினைக்கும் அவரது மூளையின் கட்டளைகள் அவரது முதுகுத்தண்டுவடம் வழியாக பயணிக்க முடியாது. காரணம் அவரது தண்டுவடம் காயமடைந்து சிதைந்துள்ளது. எனவே முதுகுத்தண்டுவடத்துக்கு வெளியே மூளையின் கட்டளைகள் பயணிக்கச் செய்யப்படுகின்றன. மூளையின் கட்டளைகள் அதில் பொருத்தப்பட்டுள்ள சில்லு மூலம் கணினிக்குள் அனுப்பப்பட்டு அந்த கணினியின் கட்டளைகள் இவர் மணிக்கட்டில் கட்டப்பட்டுள்ள நுண்ணுணரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இதன் மூலம் அவரது கையின் செயற்தன்மை தொடர்ந்து அதிகரிக்கிறது. கிடார் வீடியோ கேம் விளையாடுகிறார். வங்கி அட்டையை பயன்படுத்த முடிகிறது. அடுத்து கணினி தட்டச்சுப்பலகையில் அவரைத் தட்டச்சு செய்யவைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. “ஏறக்குறைய விபத்துக்கு முன்பிருந்ததைப் போன்ற நிலையை உணர்கிறேன். என்ன செய்ய நினைக்கிறேனோ அதை செய்ய முடிகிறது” என்கிறார் அவர். அதேசமயம் மெதுவாக மட்டுமே அவரால் இயங்க முடிகிறது. ஓஹியோவில் மேலும் பலர் இந்த சிகிச்சைக்காக பதிவு செய்துள்ளனர். ஓஹியோ அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் அலி ரெசாய் இது நம்பிக்கையளிப்பதாக தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பம் மேம்படும் போது முதுகுத்தண்டுவடம் பாதித்தவர்கள், மூளைக் காயம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுயாதீனமாக நடமாட உதவும் என்று நம்புவதாகத் தெரிவித்தார் அவர். நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முழுவதும் கம்பியிணைப்புகளைப் பயன்படுத்தி ஆய்வகத்துக்குள் நடந்திருக்கிறது. அடுத்தகட்டமாக இது கம்பியில்லாத் தொழில்நுட்பமாக வளர்ந்து நோயாளிகளுக்குக் கூடுதல் பயன் தரும் என்றும் ஓஹியோ ஆய்வகக் குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related Posts