வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைவு, முதலமைச்சருக்கு நேரமின்மையால் இறுதி செய்யப்பட்டு சபையில் நேற்றுச் சமர்ப்பிக்கப்படவில்லை. தீர்வுத் திட்ட இறுதி வரைவு எதிர்வரும் 22 ஆம் திகதியே வெளியிடப்படும் என்றும், 30ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைவு மாகாணசபையின் நேற்றைய விசேட அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குரியவாறே நிகழ்சி நிரலும் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்றைய தினம் திடீரென தீர்வுத் திட்ட விவகாரம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான காரணம் அவைத் தலைவரினால் தெரிவிக்கப்படவில்லை.
ஆளும் கட்சி உறுப்பினர் இ.ஆனோல்ட், என்ன காரணத்துக்காக தீர்வுத் திட்ட வரைவு வெளியீடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்தார். “தீர்வுத் திட்ட வரைவு 3 குழுக்கள் இணைந்து உருவாக்கின. கடந்த அமர்வில் இரண்டு குழுக்களின் தீர்வுத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது பல்வேறு உறுப்பினர்களாலும் திருத்தங்கள் தெரிவிக்கப்பட்டன. இதில் நடைமுறைச் சிக்கல் இருக்கின்றது. மூன்றாவது குழுவின் யோசனைகள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. நேரமின்மையால் என்னால் சில விடயங்களைச் செய்ய முடியாமல் போய்விட்டது. தீர்வுத் திட்டம் தொடர்பில் உறுப்பினர்கள் பல கருத்துக்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர். அவற்றையெல்லாம் உள்ளடக்க வேண்டியிருக்கின்றது. இதனால் இன்றைய தினம் சமர்ப்பிக்கவில்லை. விரைவில் இவற்றையெல்லாம் பூர்த்தி செய்து சமப்ர்பிக்கப்படும்” – என்று தெரிவித்தார்.
அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்க நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் குழு நாளைமறுதினம் 15 ஆம் திகதி ஒன்று கூடி கலந்துரையாடல் நடத்தும். இதன்போது வரைவு இறுதி செய்யப்பட்டு 22 ஆம் திகதி சபை அமர்வில் சமர்பிக்கப்படும் என்றும், அதன் பின்னர் 30 ஆம் திகதி இறுதித் தீர்வு எதிர்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.