சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்ட வீடுகளைப் பெறுவதற்கான விண்ணப்படிவங்கள் விநியோகிக்கப்படுவதாக ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் கூறினார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்றது.
இதன்போது, வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே கஜதீபன் இவ்வாறு கூறினார்.
இணைத்தலைவர்களில் ஒருவரின் ஊடாக இந்த விண்ணப்ப படிவங்களை விநியோகிக்கப்படுகின்றன. இதனை நான் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.
விண்ணப்ப படிவங்களை விநியோகிக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீட்டுத்திட்டத்தை குழப்புகின்றது, அவர்களை நம்பாதீர்கள் என பொய் பிரச்சாரமும் செய்கின்றனர். நாங்கள் வீட்டுத்திட்டத்தை வேண்டாம் என்று கூறவில்லை. 2.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருத்து வீடுகள் தான் வேண்டாம் என்கின்றோம்.
எங்களுக்கு சுமார் 1 இலட்சம் வீடுகள் இன்னமும் தேவை இது எங்கள் பிரதேசத்துக்கு ஒவ்வாத வீடுகள். இவ்வாறான பிரச்சாரத்தை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் ஒருவருடைய ஆதரவாளர்களும் செய்து வருகின்றனர் என்றார்.
உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் கருத்துக்கூறுகையில்,
இந்திய வீட்டுத்திட்டம் தொடக்கம் அனைத்து வீட்டுத்திட்டங்களும் கிராம அலுவலர் ஊடாக விண்ணப்பங்கள் பெற்று, பிரதேச செயலகங்கள் பரிசீலனை செய்தே வழங்கப்பட்டன. ஆனால் இந்த வீட்டுத்திட்டம் மாத்திரம் பத்திரிகையில் விளம்பரம் செய்து கொடுகின்றார்கள்.
எங்காவது பத்திரிகையில் விளம்பரம் செய்து வீட்டுத்திட்டம் வழங்குவார்களா? இதன்மூலம் இந்த வீட்டுத்திட்டத்தில் பாரிய ஊழல்கள் நடப்பது வெளிப்படையாக தெரிகின்றது.
10 இலட்சத்துக்கு அழகான வீடு கட்டலாம். மேலும் 3 இலட்சம் போட்டால் வீட்டுப் பொருட்களை வாங்கலாம். வீணாக மேலதிக 8 அல்லது 9 இலட்சம் ரூபாய் செலவிடப்படுகின்றது. இந்த வீடுகளின் பெறுமதிக்கு இரண்டு வீடுகளைக் கட்டலாம் என்றார்.