பேஸ்புக் பிறந்த நாளான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாக கொண்டாடும்படி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் “பிப்ரவரி 4-ம் தேதி பேஸ்புக்கின் 12-வது பிறந்த நாள். இந்த ஆண்டு விழாவானது ஒரு சமூகமாக இணைந்து நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்தும் பொருள் நிறைந்த நாள்.
2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் பேஸ்புக்கிற்கான முதல் குறியீட்டை எழுதிய போது, பேஸ்புக், கல்லூரி நண்பர்களையும், மாணவர்களையும் இணைக்கும் இடமாக இருக்கும் என்று கருதினேன்.
ஆனால் இன்று 1.5 பில்லியன் பேர் தங்களின் நண்பர்கள் மற்றும் நேசத்திற்குரியவர்களுடன் பேஸ்புக் மூலம் இணைந்துள்ளனர். நட்பு, காதல் மற்றும் கருணை என்று நாம் நாள்தோறும் பேஸ்புக்கில் பகிரும் நல்ல விஷ்யங்கள் உலகை நல்ல விதமாக மாற்றி வருகிறது.
வரும் பிப்ரவரி 4-ம் தேதி என்னுடன் நண்பர்கள் தினத்தை கொண்டாட இணைவீர்கள் என்று நம்புகிறேன். நண்பர்கள் தினத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றிய நண்பர்களைப் பற்றி அல்லது நண்பர்களுடனான தருணங்களைப் பற்றி என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். என்னால் முடிந்த வரை அவற்றை படிக்க முயற்சிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.