ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வைப்பெற்று அந்த அரசியல் தீர்வு பாராளுமன்றத்தில் பெருபான்மைப்பலத்துடன் நிறைவேற்றப்பட்டு நாட்டு மக்களின் ஆணையைப்பெறவேண்டும் அது தான் எமது இறுதி இலக்கு. இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.
தொடர்ந்து இவர் கருத்து தெரிவிக்கையில் – நாட்டில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உண்மை அறியப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிட்ட வேண்டும். அதேபோன்று மேலும், இச்சம்பவங்கள் தொடர இடமளிக்கக் கூடாது.
இவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சகல நடவடிக்கைகளும் கையாளப்படவேண்டும். என்ற ரீதியிலேயே ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் உருவாகியுள்ள நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. அதன் அடிப்படையில் தீர்மானங்களும் அமையவேண்டும் அதனை நாம் வரவேற்போம்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான பிரேரணையை கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இது தொடர்பில் தங்களின் கருத்தென்ன என்று கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வைப்பெற்று அந்த அரசியல் தீர்வு பாராளுமன்றத்தில் பெருபான்மைப்பலத்துடன் நிறைவேற்றப்பட்டு நாட்டு மக்களின் ஆணையைப்பெறவேண்டும் அது தான் எமது இறுதி இலக்கு. அதன்போது தான் எமது மக்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், கௌரவமாகவும், சுய மரியாதையுடனும் வாழக்கூடியதாக இருக்கும்.
இந்த இலக்கை அடைய நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.. இந்தப் பயணத்தில் நாம் எமது காலடியை நிதானமாக எடுத்துவைக்க வேண்டும். எமது மக்களுக்கு நீதி கிட்டவேண்டும் அவர்கள் அனுபவித்த துயரங்களுக்குப் பரிகாரம் கிட்டவேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக அவர்களின் எதிர்காலத்தில் நிரந்தர மாற்றம் பிறக்க வேண்டும். இவை அனைத்தும் நடந்தால் மாத்திரமே தமிழினம் தலைநிமிர்ந்து வாழும் சூழல் ஏற்படும் என்றார்.