எல்லாவற்றிலும் இனவாதத்தை கலக்கிறார் மஹிந்த – சிவாஜிலிங்கம்

‘நாய்க்கு கல்லெறிந்தால் அது காலைத் தூக்குவது போல, எதைச் செய்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்குள் இனவாதத்தை கொண்டுவருகின்றார்’ என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தேர்தல்களில் நான் பலமுறை போட்டியிட்டுள்ளேன். இம்முறை குருநாகலில் போட்டியிடுவது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புக் காட்டுவதற்காகவே ஆகும்’ என்றார்.

‘இலங்கை அரசாங்கம் சமஷ்டி கோரிக்கையை வழங்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்தி தமிழ் மக்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரணடைந்த 600 போராளிகள் மற்றும் காணாமற்போன 18,000 தமிழர்கள் தொடர்பில், இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட 10 விடயங்களை முன்னிறுத்தி இந்தத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக’ அவர் மேலும் கூறினார்.

Related Posts