நெல்சிப் ஊழல் விசாரணைக்கு துறை சார்ந்த நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்

உள்ளூராட்சி மன்றங்களில் கீழ் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் மத்திய அரசோ அல்லது மாகாண அரசோ இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களை விடுத்து துறைசார்ந்த நிபுணர் குழுவை விசாரணைக்கு நியமித்து இந்த ஊழல் மோசடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரைநகர் பிரதேச சபை தவிசாளர் மு.ஆ.வே.ஆனைமுகன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச சபை தவிசாளர், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் பி.சஞ்ஜீவன் இருவரும் இணைந்து யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை (13) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆனைமுகன் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

உலக வங்கியின் நிதி உதவியுடன் வடமாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 3,500 மில்லியன் ரூபாய் வேலைதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இப்பிரச்சினை வெளிக்கொண்டுவரப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன.

இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவுமில்லை எந்த தரப்பும் நடவடிக்கை எடுக்கவும் இல்லை.

இதனை விசாரிப்பதற்கு வடமாகாண சபையால் விசாரணைக்குழு நியமிக்கபட்டது. இக்குழு கடந்த மாதம் பருத்தித்துறை பிரதேச சபைக்கு விஜயம் செய்து சில ஆவணங்களை பார்வையிட்டுச் சென்றது.

இவ்விசாரணைக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று வட மாகாண சபை தெரிவித்தது.

இக்குழுவில் வடமாகாண சபை உறுப்பினர்களை விடுத்து துறைசார்ந்த நிபுணர் குழுவை முதலமைச்சர் நியமிக்கவேண்டும்.

ஆட்சி மாற்றத்தின் பின் நிதி மோசடி வழக்கில் தென்னிலங்கையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் இவ்வாறு நிதி மோசடியில் செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடுவது வேதனையளிக்கிறது.

முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாள் காலஅவகாசத்தில் முன்னெடுப்புக்கள் இல்லையேல் நாம் போராட்டம் செய்வோம் என்றார்.

Related Posts