அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும்.’ – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாட்டில் பிரச்சினைகள் அனைத்துக்கும் மூலகாரணமாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கும் நிரந்தர அரசியல் தீர்வைக்கான ஜனாதிபதி மைத்திரிபால உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தினார்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட வரைவு திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 215 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஜனாதிபதித் தேர்தலின்போது மக்களிடம் இருந்து வழங்கப்பட்ட ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால நிறைவேற்றியுள்ளார்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றியே தீருவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதனால் நாட்டின் ஜனநாயகம், மக்களின் இறைமை, உயர்நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் கெளரவம், சுதந்திரம் பாதுகாக்கப்படும். அத்துடன், நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி நிலவும் என்றும் கருதுகின்றோம்.
இலங்கையில் தலைவிரித்தாடிய சர்வாதிகாரப் போக்குக்கும் இந்த 19ஆவது திருத்தம் முடிவு கட்டியுள்ளது. எனவே, ஜனநாயக வழியில் நாடு பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எனவே, நிரந்தர அரசியல் தீர்வுக்கான எமது பயணம் தொடரும்’ – என்றார்.