யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு இதுவரை காலமும் எவ்வித உதவிகளும் முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்படவில்லையெனவும், மீள்குடியேறிய மக்களுக்கு காணிப்பிரச்சினை, வீட்டுத்திட்டத்தில் புறக்கணிப்பு, தொழில் வாய்ப்புக்கள் இன்மை உள்ளிட்ட நிறைய பிரச்சினைகள் இருப்பதாக பிரதிநிதிகள் கூறினர்.
அத்துடன், தாங்கள் 1990ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கான நஷ்டஈடும் இன்னமும் வழங்கப்படவில்லையென கூறினர்.
அதற்குப் பதிலளித்த ஆளுநர், யாழ்.ஒஸ்மானியக் கல்லூரி அதிபர் நியமனம், பரச்சேரி வயல் காணிப்பிரச்சினை, பொம்மைவெளியில் அமைந்துள்ள மஸ்ஜித்துக் அபூக்கர் பள்ளிவாசல் பிரச்சினை, மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கான நட்டஈடுகள் வழங்கவேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அந்தந்த அமைச்சுக்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவில் 2 வருடங்கள் கடமையாற்றியமையால் மீளக்குடியேறிய முஸ்லீம்களின் பிரச்சினைகள் யாவும் நன்கறிவேன் என ஆளுநர் கூறினர்.
1990ஆம் ஆண்டு 2 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை புதிய அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி நஷ்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் கூறினார்.