யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்துவருகின்ற கடும் மழையால் யாழ். மாநகரசபைக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று திங்கட்கிழமை (20) தெரிவித்தார்.
இந்த மழை காரணமாக வயல் நிலங்களிலும், பள்ளக்காணிகளிலும், வெள்ளநீர் பெருகியுள்ளது. பள்ளக்காணிகளுக்குள் வீடுகள் அமைத்து வசித்து வரும் நாவாந்துறை பகுதி மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கை மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், அப்பகுதியில் தேங்கியுள்ள வெள்ளத்தை அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.