யாழ். மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இவ்வருட (2014 – 2015) காலபோக நெற்பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் இன்று வியாழக்கிழமை (02) தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் 11 ஆயிரம் ஹெக்டெயார் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தாலும், 2014 மற்றும் 2015 வரையான காலபோகத்திற்கு உரிய மழை இன்னும் திருப்திகரமான முறையில் அமையாததால் பல விவசாயிகள் அச்ச நிலையில் உள்ளார்கள்.
கடந்த 2012 – 2013 மற்றும் 2013 – 2014 ஆகிய இரண்டு காலபோகங்களில் தொடர்சியாக கூடியளவில் நட்டத்தை எதிர்நோக்கி பாரிய பின்னடைவுகளை விவசாயிகள் சந்தித்துள்ளார்கள். அதற்குரிய நட்டத்தை ஈடுசெய்ய முடியாமலும் சில விவசாயிகள் உள்ளனர்.
தொடர்ந்தும் இந்த வருடம் ஒழுங்கான மழைவீழ்ச்சி கிடைக்காத காரணத்தால் இவ்வருட காலபோக நெற்செய்கையில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டுவது குறைவாகவுள்ளது என்றார்.
யாழ் மாவட்டத்தில் 100 வீதம் மழையை நம்பிய நெற்செய்கை தான் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.