‘வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராயந்து உடனடியான அதற்கு தீர்வை பெற்று கொடுக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக மீன்பிடி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணத்திலுள்ள மீன்பிடி தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மீன்பிடி ஆலோசனை குழுவின் முதலாவது அமர்வு வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப அமைச்சின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றது.
இந்த அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘மீனவ சமூகத்தினரால் பல பிரச்சனைகள் முதலமைச்சரிடம் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டிருந்தன.
அந்த பிரச்சனைகள் தொடர்பாக உடனடியான தீர்வை பெற்று கொடுக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தொடர்பான அபிவிருத்திகளை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும், பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும், நிவாரணங்கள் வழங்குதல் ஆகிய செயற்பாடுகளை இந்த குழு மேற்கொள்ளும்.
இந்த குழுவில் உள்ள அதிகாரிகள் வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் சென்று மீன்பிடியாளர்களின் பிரச்சனைகளை இனங்காண்பார்கள்.
அது தொடர்பாக கிராம மட்ட மீனவ அமைப்புக்களை சந்தித்து பிரச்சனைகளை வரிசைப்படுத்தி அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள். இதற்கான அனுமதி இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.
எந்தவொரு கட்சி பேதமுமின்றி இந்த குழுவை இயக்கி, மக்களுக்கான பிரச்சனைகளை தீர்க்க அனைத்து உறுப்பினர்களும் இணைந்து செயற்பட வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அமர்வில், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாணத்திலுள்ள மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.