காரைநகரில் போராட்டம்!!

தண்ணீர், வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி இன்று (17) காரைநகர் – ஊரி, பாலாவோடை, கல்லந்தாழ்வு, வேரப்பிட்டி, மருதபுரம், பெரயடைப்பு, நீலங்காடு பகுதி மக்கள் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலக்த்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் தமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திணைக்கள அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

அதனை தொடர்ந்து காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிறீபவானந்தராஜா, பிரதேச செயலர் உள்ளிட்ட பதவி நிலை அதிகாரிகள் சிலர் போராட்ட இடத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

அபிவிருத்தி பணிகளில் தொடர்ச்சியாக எங்களை புறக்கணித்து வருகின்றனர். நடமாட்டம் குறைந்த காட்டு பகுதிகளில் உள்ள வீதிகளை காப்பெட் வீதிகளாக புனரமைக்கின்றனர். ஆனால் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதிகளை புனரமைப்பு செய்யவில்லை.

குடிநீர் வழங்கல் சீராக இடம்பெறவில்லை. எமது பகுதிக்கான குழாய்வழி மூலமான குடிநீர் திட்டம் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஒவ்வொரு தடவை கேட்டாலும் அதற்கு ஏதாவது சாட்டு கூறுகின்றனர்.

ஊரி பிரதான வீதியில் குடிநீர் வழங்கல் குழாய்களை புதைப்பதற்கான வரைபடத்தினை காண்பிக்கின்றனர். ஊரியில் எத்தனை கிராமங்கள் உள்ளன? அவற்றை எல்லாம் வரைபடத்தில் உள்ளடக்கவில்லை. கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை.

அரசியல் பழிவாங்கல் செய்கின்றார்கள். எங்களை எதற்காக புறக்கணிக்கின்றீர்கள்? எமது பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வையுங்கள் என்றனர்.

அதற்கு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதிலளிக்க முற்பட்டபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக தமது கருத்துக்களை முன் வைத்தனர். இந்நிலையில் மூன்றுபேரை உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளே சென்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பிரதேச செயலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

Related Posts