பிலிப்பைன்ஸில் பாடசாலையொன்றில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு, பின்னர், தாக்குதல் நடத்திய மாணவர், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தாக்குதல் நடத்திய மாணவர், தான் தாக்குவதை நேரலையாக காட்சிப்படுத்துவதற்காக ஒரு கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் ஜம்போவாங்கா நகரில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவர் இரண்டு துப்பாக்கிகளை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அவ்வேளை முதலில் அந்த மாணவர், எதிரே வந்த ஆசிரியரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார். அடுத்து, சக மாணவர் ஒருவரை நோக்கியும் சுட, அந்த மாணவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலில் மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.