தமிழக முதலமைச்சர் விஜயின் மகனும், இளம் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக இத்திரைப்படம் ஜூலை 31 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு காரணங்களால் இதன் வெளியீட்டு திகதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு அசாதாரணமான நாயகன் தனது தனித்துவமான பாதையை உருவாக்கி, பல்வேறு தடைகளைத் தாண்டி எப்படி உயர்கிறான் என்பதை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் திருப்பங்களுடன் கூடிய சாகசப் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் தமன் இசையில், சந்தீப் கிஷன் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ள பாடல் ஒன்று பிரம்மாண்ட அரங்கில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், தலக்கோனா காடுகள் மற்றும் தாய்லாந்தின் அழகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல் எடிட்டிங் பணியையும், பெஞ்சமின் எம் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது சந்தீப் கிஷன் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில், படத்தின் பிந்தைய கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் திகதி ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.