இலங்கையின் மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக கனமழை பொழிவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியரும், நாட்டின் பிரபல வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு இன்று மாலை, இரவு என மழை தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாளையும் (04.08.2026) கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பல ஆறுகள் வெள்ள மட்டத்தை அடைந்துள்ளன. மகாவலி, களுகங்கை, களனி கங்கை போன்றன பல இடங்களில் பெருக்கெடுத்துள்ளன.
இதனால் ஆற்றங்கரையோரங்கள், நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகள், மற்றும் தாழ்நிலப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.
நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவுக்கான அத்தனை ஏதுநிலைகளையும் கொண்டுள்ளன.
எனவே அன்புக்குரிய மக்கள் அனைவரும் தயவு செய்து பாதுகாப்பான வழிகளூடாக நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளை விட்டு வெளியேறுவது மிகவும் சிறந்தது.
தயவு செய்து இன்று இரவு வரை காத்திருக்காமல் பகல் பொழுதே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.