கொழும்பு துறைமுக நகரப் (Port Cit) பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்துத் தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

உண்மைகளை விரைவில் கண்டறிய முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறும், சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்குமாறும் சீனத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள சீனக் குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்குமாறும், அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாகக் பொலிஸாரிடம் தெரிவித்து, உதவிக்குத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் தூதரகம் மேலும் நினைவூட்டியது.
கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு காணாமல் போனதாகக் கூறப்பட்ட சீன நாட்டவர் ஒருவரின் சடலம், நேற்று எஹெலியகொடவில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சீன நாட்டவர் மேலும் இருவருடன் சேர்த்து கடத்தப்பட்டார்; ஆனால் மற்ற இருவரும் காயங்களுடன் கைவிடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.