இரத்த பரிசோதனைக்காக அதிக கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் அறவிடப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில், கந்தர்மடம் சந்திக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் முழு இரத்தப் பரிசோதனைக்காக அறவிடக்கூடிய அதிகபட்ச கட்டணமாக 400 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தனியார் மருத்துவமனை இந்தப் பரிசோதனைக்காக ரூ. 550 கட்டணம் அறவிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது.
இதனையடுத்தே குறித்த நிறுவனத்திற்கு ரூ. 30 இலட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.அத்துடன், இந்த விதிமீறல் தொடர்பான விபரங்களை தனது சொந்தச் செலவில் நாட்டின் முக்கிய நாளிதழ்களில் அறிவித்தலாக வெளியிடுமாறும் அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் அல்லது மருத்துவ ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் செலுத்தும் ஒவ்வொரு தொகைக்கும் சரியான கட்டணச் சீட்டைப் பெற்றுக் கொள்வது அவர்களின் உரிமையாவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் அது முக்கிய ஆதாரமாகவும் பயன்படும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாகக் கட்டணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபையில் முறைப்பாடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.