பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“HIV மற்றும் STI எனப்படும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள், குறிப்பாக பதின்ம வயது இளைஞர், யுவதிகளிடையே முந்தைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்கு அதிகரிப்பைக் காட்டியுள்ளன.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் பிரிவினால் கலந்துரையாடப்பட்டதன் பின்னரும், சில பாடசாலை மாணவர்களும் சில பல்கலைக்கழக மாணவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாலும், இது குறித்து பிரதமருடனும், சிறுவர் விவகார அமைச்சருடனும் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கம் என்ற ரீதியில், சம்பந்தப்பட்ட தரப்பினரை ஒன்றிணைத்து இந்த நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிலர் தாங்கள் அறியாமலேயே இதற்கு இரையாகிவிட்டதாகத் தங்களது தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு அதிகமாக அடிமையாவதன் மூலம், பிள்ளைகள் பிற்காலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு தூண்டப்படும் போக்கு காணப்படுவதாக மனநல மருத்துவர் சமிந்த வீரசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால் மூளையில் ஏற்படும் இரசாயனக் கலவை மாற்றங்கள் காரணமாக, பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டை நோக்கித் தள்ளப்படலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.