16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் “சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்” (Social Media Minimum Age Bill) இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இச்சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும்.
இச்சட்டமூலத்தின்படி, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக தளங்களை அணுகுவதைத் தடுக்கத் தேவையான விதிமுறைகளை வகுக்க உரிய அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் அல்லது எந்த நேரங்களில் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் நியமிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளர் ஒருவரினால் இச்சட்டத்தின் விதிகள் கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
சட்டமூலத்தின் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளுக்கிடையில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில், சிங்கள மொழியிலான உரை மேலோங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.