AI இன் உதவியுடன் தலை ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவி சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சகோதரிகள் கடந்த 2023ஆம் ஆண்டு நைஜீரியாவில் பிறந்துள்ளனர்.

தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களை பிறப்பில் சத்திரகிச்சைக்கு உட்படுத்துவதில் மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையில் மூளை திசுக்கள் மாத்திரமன்றி இரத்த குழாய்களும் இவர்களுக்கு ஒட்டியதாக காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் 20 நாடுகளைச் சேர்ந்த 60 மருத்துவ நிபுணர்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவான AI இன் மருத்துவ உதவிகளுடன் 40 மணித்தியால சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். Mercy and Goodness என அழைக்கப்படும் இந்த இரட்டை சகோதரிகள் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சத்திர சிகிச்சை செயற்பாடுகளை திட்டமிடுவதற்கும் ஒத்திகை பார்ப்பதற்கும் வைத்தியர்கள் AI, 3D பரிமாணம், மெய்நிகர் யதார்த்தம் மற்றும் மேம்படுத்தப்பட்ட யதார்த்த செயன்முறைகளை பயன்படுத்தியுள்ளனர். உயர் சிக்கலான செயன்முறைகளை சத்திர சிகிச்சை நிபுணர்கள் அதிக துல்லியத்துடன் கையாள்வதற்கு இந்த AI தொழில்நுட்பம் உதவியுள்ளது.
அபு தாபியிலுள்ள ஷேக் கலீபா வைத்தியசாலையில் இறுதிகட்ட சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளது. பிரிக்கப்பட்ட சகோதரிகள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரு உயிர்களை காப்பாற்றிய இந்த சத்திர சிகிச்சை மருத்துவ வரலாற்றில் முக்கியமான மைல்கல் என வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.