நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியவிளான் பகுதியில் நிலத்தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய பெரியவிளான் நிலத்தின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இதன் பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பணியாளர்களை அழைத்து வந்து அந்த நிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள், நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி எம்.பி. இராமநாதன் அர்ச்சுனாவுடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா, தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை திடீரென எடுத்து பெண்களை நோக்கி காட்டி மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்வரை மல்லாம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.